ஈப்போ நவ 8- சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு வருடத்திற்கு 30 கோடி வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு நிறுவனம் செலவிடுகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பான சொக்சோ சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதில் பங்களிப்பாளர்களின் சுமையைக் குறைக்க உதவுவதற்காக டையாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 30 கோடி வெள்ளிக்கும் அதிகமாக செலவிடுகிறது என்றார் அவர்.
நாடு முழுவதும் உள்ள 39 டையாலிசிஸ் சிகிச்சை மையங்களுக்கு 70 டையாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த ஆண்டு சொக்சோ 35 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றார் அவர்.
நேற்று ஈப்போவில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், பேராக் மாநில சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.




