ஈப்போ, நவ. 8 - நாட்டில் இஸ்ரேல் தொடர்பான பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையின் எதிரொலியாக யாரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக எந்த புகாரையும் மனித வள அமைச்சு இன்னும் பெறவில்லை.
புறக்கணிப்பு காரணமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்து அமைச்சுக்கு ஏதேனும் அறிக்கை அல்லது புகார்கள் வந்ததா என்ற நிருபர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் வி.சிவகுமார் இதனை உறுதிப்படுத்தினார்.
புகார்கள் இருந்தால் நாங்கள் அவற்றை விசாரிப்போம். இந்த கட்டத்தில் புகார்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற சொக்சோ தீபாவளி 2023 கொண்டாட்ட நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.
இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிக்க மலேசியர்கள் ஒன்றிணைந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டதால் பகுதி நேர பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே சிவக்குமார் கூறுகையில், கடந்த காலங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்காமலும் வேலையின் நோக்கத்தின அடிப்படையில் சரியாக கவனிக்காமலும் கைவிட்டவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.
பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் நாட்டில் கட்டாய உழைப்பைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து முதலாளிகளும் முகவர்களும் இதுபோன்ற செயல்களை நிறுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேலை வாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்களை நாட்டிற்குக் கொண்டு வருவது தவறு.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு முன் முதலாளிகள் அவர்களுக்கான வேலையை உறுதி செய்ய வேண்டும். வேலை இல்லை என்றால் அவர்களை நாட்டுக்குள் கொண்டு வரக்கூடாது. இத்தகைய செயல்களைபுரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.




