கோலாலம்பூர், நவ 8 - சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஆள்
கடத்தல் சம்பவம் உண்மையானது அல்ல என்று காவல் துறை
தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, கடந்த மாதம் 31ஆம் தேதி சிப்பாங்,
சுங்கை பீலேக்கில் உள்ள சிப்பாங் புத்ராவில் போலீசாரின்
சோதனையிலிருந்து சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முயல்வதை அந்த
காட்சிகள் சித்தரிக்கின்றன என அத்துறை கூறியது.
சிப்பாங் புத்ராவில் சலவை நிலையம் முன் கார் ஒன்று
சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்படுவது தொடர்பில் கடந்த வாரம்
செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தங்களுக்குத் தகவல்
கிடைத்ததாகச் சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள்
அஸ்ரான் கூறினார்.
சுங்கை பீலேக் காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த
போலீஸ்காரர்கள் அந்த காரின் ஓட்டுரை சோதனையிட முயன்றனர்.
போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த அந்த கார் ஓட்டுநர்
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் மோட்டார்
சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றதாக அவர்
தெரிவித்தார்.
விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் அன்றைய தினம்
பிற்பகல் 1.00 மணியளவில் நீலாய், தாமான் செமராக் 1இல் உள்ள
ஹோட்டல் ஒன்றின் எதிரே இரு அந்நிய நாட்டிரை கைது செய்ததாக
அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அவ்விரு நபர்களும் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது
சோதனையில் கண்டறியப்பட்டதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பான
விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் வரும் நவம்பர் 18ஆம் தேதி
வரை 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சிப்பாங் மற்றும் நெகிரி செம்பிலானில் வீட்டின் எதிரே விளையாடிக்
கொண்டிருக்கும் சிறார்கள் மற்றும் பள்ளி மாணவர்களை சாம்பல் நிற
ஹொண்டா சிவிக் காரில் வரும் நபர்கள் கடத்துவது போல் சித்தரிக்கும்
காட்சிகள் அடங்கிய காணொளி வாட்ஸ்ஆப் மூலம் பரவி வந்தது.




