கோலாலம்பூர், நவ 7 - இம்மாதம் 11 முதல் 2024 மார்ச் வரை நிகழும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நான்கு முதல் ஆறு கனமழை நிகழ்வுகள் உண்டாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் முதல் ஜனவரி 2024 வரையிலான வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டத்தில் கிளந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் மேற்கு சரவாக் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.
இருப்பினும், பருவமழை வலுவாகவும், அதே நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் இருந்தால் மலேசியாவின் பிற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும்
பல நாட்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான கனமழையுடன் புயலும் கடல் பெருக்கும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் வெள்ள அபாயம் மிகவும் தீவிரமானதாக இருக்கும்.
இது தவிர, தொடர்ச்சியான மற்றும் வலுவான வடகிழக்கு காற்று காரணமாக கடல் கொந்தளிப்பும் கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளதோடு தென் சீனக் கடலில் பெரிய அலைகளையும் ஏற்படுத்தும் என்று ஹெல்மி கூறினார்.
வானிலை ஆய்வுத் துறையின் கணிப்பின்படி தீபகற்ப மலேசியாவின் வடக்கே (பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு), சபா, லாபுவான் மற்றும் வடக்கு சரவாக் வடகிழக்கு ஆகிய பகுதிகளில் பிப்ரவரி முதல் மார்ச் வரை குறைவான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




