குவாந்தான், நவ 7- கெந்திங் ஹைலண்ட்சில் 46 லட்சம் வெள்ளி
மதிப்பிலான கஸினோ சில்லுகள் களவு போன சம்பவத்தில் தொடர்புடைய
முக்கிய புள்ளி உள்பட ஐவரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ரவுப், தாமான் மேடான் இண்டா சுங்கை லுய் பகுதியைச் சேர்ந்த லீ
கியேன் கியோங் (வயது 44) என்ற ஆடவன் இந்த கொள்ளைச்
சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டதாகப் பகாங்
மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.
ஜெராண்டுட், தாமான் ஸ்ரீ டாமாக்கை சேர்ந்த சாம் திங் காய் (வயது 42),
ரவுப், கம்போங் பாரு செம்பாலிட், ஹோ கியான் லிம் (வயது 46), ஜொகூர்
பாரு, தாமான் உங்கு அமினாவைச் சேர்ந்த ஹோ கியான் இயோ (வயது
51) மற்றும் கிள்ளான் தாமான் பாயு பெர்டானாவைச் சேர்ந்த சுங் சுய் லுய்
(வயது 39) ஆகியோர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய இதர
நபர்களாவர் என்று அவர் சொன்னார்.
கடந்த மாதம் 29 முதல் இம்மாதம் 1ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்
இக்கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு சீன
பிரஜை உள்பட பத்து பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிறப்பு கஸினோ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1.160
சில்லுகள் களவு போனதை அந்த சூதாட்ட மையத்தின் நிர்வாகத்தினர்
கடந்த மாதம் 28ஆம் தேதி கண்டு பிடித்தனர்.
இரு ஆடவர்கள் அவசர வேளைகளில் பயன்படுத்தப்படும் வழியிலுள்ள
பின்புற கதவை உடைத்து உள்ளே நுழையும் காட்சி இரகசிய கண்காணிப்பு
கேமராவில் பதிவாகியிருந்தது.




