கோலாலம்பூர், நவ. 5: இன்று அதிகாலை வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தின் தாமான் செமினி இண்டா மற்றும் கம்போங் பாங்கி லாமா ஆகிய இடங்களில் உள்ள சுமார் 200 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
தாமான் செமினி இண்டாவில் 14 வீடுகளில் வசிக்கும் 50 பேர் 1.5 மீட்டர் வெள்ளத்தில் சிக்கியதாகக் கூறிய அவர், வெள்ளம் தற்போது வடிந்து வருவதாக வருவதாக தெரிவித்தார்.
கம்போங் பாங்கி லாமாவில், 10 வீடுகளில் இடுப்பு மட்டம் வரை நீர் பெருகியதால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேரை மீட்க தீயணைப்புப் படையினர் உதவியுள்ளனர். இங்கு வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அதுமட்டுமின்றி, கம்போங் பாங்கி லாமாவில் பாதிக்கப்பட்ட 100 பேரை தாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியதாக அகமது முக்லிஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் பாங்கி கிராமத்தின் கிராம சமூக மேலாண்மை மன்ற மண்டபம் மற்றும் தாமான் பாங்கி ரியா ஒற்றுமை பாலர் பள்ளி ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.








