ஷா ஆலம், நவ 5- பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய எந்த சாத்தியக்கூறுகளையும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்ற உண்மையை கடந்த 2021ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் நமக்கு போதித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மாநில அரசு அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு வெள்ளப் பேரிடருக்குப் பிறகு மாநில அரசு எந்த சாத்தியக்கூறுகளையும் அலட்சியப்படுத்த விரும்பவில்லை. அடுத்து ஏற்படக்கூடிய பேரிடர் கடந்த முறை ஏற்பட்டதை விட மிகவும் மோசமானதாகக் கூட இருக்கலாம் என்று அவர் சொன்னார்.
ஆகவே, அனைத்து நிலையிலும் முழு தயார் நிலையில் இருக்கவேண்டும் என நாம் உத்தரவிட்டுள்ள்ளோம். தற்போதைய பருவநிலை மாற்றத்தில் நாம் எதையும் கணிக்க இயலாது என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா அஸாலியா மண்டபத்தில் நடைபெற்ற டீம் சிலாங்கூர் பேரிடர் பணிக்குழுவினருடனான தேநீர் விருந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷூம் கலந்து கொண்டார்.
தற்போது டீம் சிலாங்கூர் குழுவின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய மந்திரி புசார், இதர பாதுகாப்பு படையினருடன் இணைந்து தொடக்க மீட்பு பணிகளை மேற்கொள்வதற்குரிய தகுதியை இக்குழு பெற்றுள்ளது என்றார்.
எதிர்பாராத வகையில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்வதற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்








