உலு லங்காட், நவ 5 - கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செமினி, கம்போங் பத்து தீகாவில் உள்ள 30 குடும்பங்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகம் 7,500 வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியது.
பாதிக்கபட்ட ஒவ்வொரு குடும்பமும் தலா 250 வெள்ளியை உதவித் தொகையாகப் பெற்றதாக அதன் சமூக கடப்பாடு மற்றும் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.
இந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னதாக உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் தொடக்கக்கட்ட உதவிகளை வழங்கியதாக நான் அறிகிறேன். மேலும் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் கூடுதல் உதவிகளை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார்.
செமினி, கம்போங் பத்து தீகா கிராம மேம்பாட்டு மன்ற மணடபத்தில் நேற்று நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த உதவி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஓரளவு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே, இந்த சவாலான பொருளாதார காலக்கட்டத்தில் குடியிருப்பாளர்களின் தேவைகளை அறிந்து உதவ முன்வந்த எம்.பி.ஐ.க்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முகமது சானி தெரிவித்தார்.
மாநில அரசின் துணை நிறுவனம் என்ற முறையில் எம்.பி.ஐ. எப்போதும் பரிவுமிக்க மற்றும் உதவி தேவைப்படுபவர்களின் நலனுக்காக தீவிரமாக பாடுபடுகிறது என்றும் அவர் கூறினார்.








