ஷா ஆலம், நவ 2- கடுமையான குடிநீர் விநியோகப் பிரச்சனையை
எதிர்நோக்கியிருக்கும் சில மாநிலங்களில் அந்த அத்தியாவசியப் மூலப்
பொருள் பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசுகளுக்கிடையே கட்சி
எல்லை கடந்த ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேராக் ஆற்றிலிருந்து நீரைப் பெற வேண்டிய தேவை உள்ள அளவுக்கு நீர்
விநியோகப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள பினாங்கு மாநிலமும் இதில்
அடங்கும் என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை
மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஜிஸ் கூறினார்.
பல மாநிலங்களில் பயன்தராமல் போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவு
அதிகமாக உள்ளது. ஆகவே, நீர் கட்டண மறுசீரமைப்பு குறித்து
விவாதிப்பதற்கு மாநில அரசுகளுக்கிடையே கட்சி பேதம் கடந்து
விவாதங்கள் நடத்தப்படுவது அவசியமாகும் என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவை அறிக்கையை மத்திய அரசு
தயார் செய்யும் என்றும் அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று பாகான் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் லிம்
குவான் எங் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
சுங்கை பேராக் ஆற்றிலிருந்து நீரை பினாங்கிற்கு மாற்றி விடுவது
தொடர்பில் பினாங்கு மற்றும் பேராக் மாநில அரசுகளுக்கிடையிலான
பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் தொடங்கியுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற தேசிய
நீர் மன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரத்தை தாம் முன்வைத்துள்ளதாக
நிக் நஸ்மி கூறினார்.




