கோலாலம்பூர், நவ.2- நாட்டில் புகழ்பெற்ற மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய சங்கத்திற்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் நேற்று 40,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய சங்கம் கடந்த 1984 ஆம் ஆண்டு டான்ஸ்ரீ டாக்டர் எம். ஜெகதீசனால் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்திற்கு அவரே முதல் தலைவர்.
ஆசிய மாஸ்டர் மற்றும் உலக மாஸ்டர் ஓட்டப் பந்தய போட்டிகளில் மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய விளையாட்டுகள் பல சாதனைகளை படைத்து நாட்டிற்கு பதக்கங்களை வாரி குவிந்துள்ளனர் என்று மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
2019 இல் கூச்சிங்கில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய போட்டியில் மலேசிய 26 தங்கம், 39 வெள்ளி, 54 வெண்கலம் வென்று சாதனை படைத்தது.
வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸ் கிளார்க் நகரில் நடைபெறும் 22 ஆவது ஆசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 120 விளையாட்டாளர்கள்
பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய சங்கம் தொடர்ந்து சாதனைகளை படைக்க ஊக்குவிக்கும் வகையில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று 40,000 வெள்ளியை வழங்கியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் ஆசிய போட்டியில் மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய விளையாட்டாளர்கள் அதிக பதக்கங்களை வென்று வெற்றியோடு நாடு திரும்பும் படி மனித வள அமைச்சர் சிவகுமார் வாழ்த்தினார்.
மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய சங்கத்தின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
நேற்று மனித வள அமைச்சர் சிவகுமார் 40,000 வெள்ளி காசோலை வழங்கும் நிகழ்வில் மலேசிய மாஸ்டர் ஓட்டப் பந்தய சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரனும் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




