கோலாலம்பூர், நவ 1- கடந்த 1998ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடியின் போது மலேசியா செய்தது போல் ரிங்கிட் மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் விரும்பவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் தற்போதைய சவால்களை கையாள்வதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்று துணை நிதி அமைச்சர் II ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.
உலகளாவிய நிதிச் சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் அந்நிய செலாவணி நகர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான நிலையில் தற்போதைய தேசிய பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.
மேலும், ரிங்கிட் மதிப்பை நிரந்தரமாக நிர்ணயித்துவிட்டால் மலேசியா அதன் பணவியல் கொள்கை சுதந்திரத்தை இழக்கும் என்பதோடு அதற்கு பதிலாக ரிங்கிட் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட நாணயங்களின் அடிப்படையில் வட்டி விகிதங்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, ரிங்கிட்டை அமெரிக்க டாலருடன் நிர்ணயம் செய்தால் அமெரிக்காவில் உள்ள வட்டி விகிதங்களுக்கு ஏற்ப நாம் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். இது மக்களுக்கு அதிக நிதி செலவின ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மக்களவையில் இன்று மச்சாங் தொகுதி உறுப்பினர் வான் அகமது பைசால் வான் அகமது கமால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு முன்பு மேற்கொண்டதைப் போல் பேங்க் நெகாரா வழியாக அரசாங்கம் ரிங்கிட்டின் மதிப்பைக் நிலையாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதா என்று வான் அகமது கேள்வியெழுப்பியிருந்தார்.








