ஜித்ரா, அக் 31- சாலை போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் விதிகளைப்
பின்பற்றும் போக்கும் விழிப்புணர்வும் வர்த்தக வாகன ஓட்டுநர்கள்
மத்தியில் இன்னும் குறைந்தே காணப்படுகிறது என்று சாலை
போக்குவரத்து இலாகாவின் அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி
டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.
இவ்விவகாரத்தை தமது துறை மிகவும் கடுமையாக கருதுவதாகக் கூறிய
அவர், சாலை விதிகளைப் புறக்கணிக்கும் நிறுவனங்கள், உரிமையாளர்கள்,
ஓட்டுநர்கள் மற்றும் சாலைகளைப் பயன்படுத்தும் இதரத் தரப்பினர்
விஷயத்தில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது
என்றார்.
ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட சாலை விதிகளை அனைத்து
வாகனமோட்டிகளும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதோடு சாலைகள்
எப்போதும் பயணிப்பதற்கு பாதுகாப்பானவையாக இருப்பதை உறுதி செய்ய
வாகனங்கள் மீதான பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டும் என அவர்
கேட்டுக் கொண்டார்.
இங்குள்ள ஜித்ரா டோல் சாவடியில் நேற்றிரவு நடத்தப்பட்ட வர்த்தக
வாகனங்களுக்கு எதிரான சிறப்பு சோதனை நடவடிக்கைக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த சோதனை
நடவடிக்கையில் காவல் துறை மற்றும் தேசியப் போதைப் பொருள் தடுப்பு
நிறுவன அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.
இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட ஓப் பாத்தோ 2023 சோதனை
நடவடிக்கையில் வர்த்தக வாகனங்கள் உள்பட 321,263 வாகனங்கள் மீது
தமது துறை சோதனை மேற்கொண்டதாகவும் லோக்மான் குறிப்பிட்டார்.
பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக நிறுவனங்கள், உரிமையாளர்கள்
மற்றும் ஓட்டுநர்களுக்கு 73,296 குற்ற அறிக்கைகள் வழங்கப்பட்டன
என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கைகளின் போது அதிக எடையை ஏற்றிய 16
லோரிகள் உள்பட 705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர்
சொன்னார்.








