கோல திரங்கானு, அக் 31- திரங்கானுவில் கடந்த ஓராண்டு காலமாகக்
கள்ள நோட்டு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக
நம்பப்படும் கும்பல் ஒன்றை மாநிலப் போலீசார் முறியடித்துள்ளனர்.
கோல திரங்கானுவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் இரு
ஆடவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இக்கும்பலின் நடவடிக்கை
முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகத் திரங்கானு மாநிலப் போலீஸ் தலைவர்
டத்தோ மாஸில் மஸ்லான் கூறினார்.
ஓப் ராஜாவளி நடவடிக்கையின் கீழ் கோல திரங்கானு நகரிலுள்ள
வாடகை வீடொன்றில் நேற்று முன்தினம் அதிகாலை 4.00 மணியளவில்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்
என்று அவர் சொன்னார்.
இருபத்தெட்டு மற்றும் 33 வயதுடைய அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும்
சிலாங்கூர் மற்றும் திரங்கானுவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் இன்று
இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக இக்கும்பல் கடைகளில் சிகிரெட்,
எழுதுபொருள்கள், உணவு போன்ற குறைந்த விலையிலான பொருள்களை
இக்கும்பல் வாங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதோ மட்டுமின்றி போதைப் பொருளை வாங்குவது போன்ற
சட்டவிரோதச் சந்தைகளில் இந்த கள்ள நோட்டை அவர்கள்
பயன்படுத்தியுள்ளனர் என்றார் அவர்.
இக்கும்பலிடமிருந்து 100 வெள்ளி மதிப்பு கொண்ட 27 கள்ள நோட்டுகள்,
இரு கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, கார் மற்றும் கள்ள நோட்டு
தயாரிப்பதற்கு பயன்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன என்று
அவர் மேலும் தெரிவித்தார்.
வாடிக்கையாளரிடமிருந்து தாம் கள்ள நோட்டைப் பெற்றது தொடர்பில்
எழுதுபொருள் விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து
பெறப்பட்ட புகாரின் பேரில் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்
என்றும் அவர் கூறினார்.
கள்ள நோட்டை தயாரிப்பது தொடர்பான நுட்பத்தை அக்கும்பல் யூடியுப்
காணொளி மூலம் கற்றுக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.








