கோலாலம்பூர், அக் 31 - கோழிக்கான உதவித் தொகை மற்றும் கோழி விலை உச்சவரம்பு கட்டுப்பாடுகள் எதிர்வரும் நவம்பர் முதல் தேதி முடிவுக்கு வந்த பிறகு அந்த உணவுப் பொருளின் விலை மறுபடியும் கடுமையாக உயரும் பட்சத்தில், இலக்கிடப்பட்ட மானியச் செயல் முறையை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அமல் செய்யும்.
உதவித் தொகை தேவைப்படுபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த மானியச் சலுகையை அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த அணுகுமுறை மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
கோழி விலை அதிகரிப்பு அபரிமிதமாக இருந்தால் பி40 தரப்பினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்களை வழங்க உத்தேசித்துள்ளோம். ஒட்டு மொத்தமாக உதவித் தொகை வழங்கினால் பெரும் முதலாளிகளும் உற்பத்தியாளர்களும் மட்டுமே பயனடைவர் என அவர் குறிப்பிட்டார்.
(கோழி தீவனம்) தானிய சோளம் மற்றும் சோயா பீன் விலை தற்போது குறைந்துள்ளது, அதனால் கோழியின் விலை குறையும் என்று நேற்று மக்களவையில் 2024ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றும் போது அவர் கூறினார்.
உற்பத்தி செலவினம் மற்றும் மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பைக் கண்டாலும் தற்போது மற்றும் எதிர்காலத்தில் கோழி விநியோகம் போதுமானதாக இருக்கும் என்றும் கோழி உற்பத்தியாளர்கள் உறுதியளித்துளாளனர் என்றும் முகமது சாபு தெரிவித்தார்.
இதற்கிடையில், பாடிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் (பெர்னாஸ்) அரிசி விற்பனை ஏகபோக உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர், பெர்னாஸின் தனியார்மயமாக்கல் மாதிரி இடை மானியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது இறக்குமதி லாபம் அரசாங்கத்தால் வழங்கப்படும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் என விளக்கினார்.








