ஷா ஆலம், அக் 30 - இவ்வாண்டு செப்டம்பர் வரை கைவிடப்பட்ட மற்றும்
முழுமையடையாத 301 வீடமைப்புத் திட்டங்களுக்குப்
புத்துயிரளிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மேம்பாட்டுத் துறை
துணையமைச்சர் அக்மால் நசாருல்லா முகமது நாசீர் கூறினார்.
மொத்தம் 38,752 வீடுகளை உள்ளடக்கிய இந்த 301 வீடமைப்புத்
திட்டங்களின் நிகர மேம்பாட்டு மதிப்பு 2,888 கோடி வெள்ளியாகும் என்று
அவர் தெரிவித்தார்.
கட்டுமானப் பணிகள் தாமதமடைந்த மற்றும் கைவிடப்பட்ட தனியார்
வீடமைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு நிவர்த்தி காண
அமைச்சு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருவதாக அவ குறிப்பிட்டார்.
அமைச்சின் நடவடிக்கைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டவையாகவும்
இலக்கை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய
நடவடிக்கைள் மிகவும் துல்லியமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன
என்று அவர் கூறினார்.
மக்களவையில் இன்று சிகாமாட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்
அவர் இவ்வாறு சொன்னார்.
கைவிடப்பட்ட தனியார் வீடமைப்புத் திட்டங்கள் மீதான பணிக்குழுவை
அமைக்கும் அமைச்சின் நடவடிக்கை மூலம் வீடமைப்புத் திட்டத்தின்
நடப்பு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என
அவர் தெரிவித்தார்.
இத்தகைய பிரச்சனைகள் மீண்டும் எழாதிருப்பதை உறுதி செய்ய மாநில
அரசுகள், நில அலுவலகங்கள், ஊராட்சி மன்றங்கள், வங்கிகள், வீடு
வாங்குவோர் சங்கங்களுடன் அமைச்சு அணுக்கமாகச் செயல்பட்டு
வருகிறது என்றும் அவர் கூறினார்.








