அலோர் ஸ்டார், அக் 30 : கடந்த புதன் கிழமை, கெடா மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் (மகிஸ்) துறை மேற்கொண்ட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் தாய்லாந்திற்கு RM180,000 மதிப்புள்ள 90 கிலோகிராம் கடல் குதிரையைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
கெடா மாநில மீன்வளத் துறையின் அமலாக்கப் பிரிவு மற்றும் ராயல் மலேசியன் சுங்கத் துறையின் ஒத்துழைப்புடன் மாலை 4 மணி அளவில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மகிஸ் கெடா இயக்குநர் ஹிஷாம் அபு பக்கர் தெரிவித்தார்.
" சோதனை முடிவில் அவை RM180,000 மதிப்புடைய 90 கிலோ கடல் குதிரைகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எந்த சரியான ஆவணங்களும் இல்லாமல், அதாவது, மகிஸ்யின் ஏற்றுமதி அனுமதி இல்லாமல் இந்த கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 (சட்டம் 728) இன் பிரிவு 11(2) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அதே சட்டத்தின் பிரிவு 11(3) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப் படலாம்.
– பெர்னாமா








