அலோர் ஸ்டார், அக் 30: நேற்று மதியம் போகோக் சேனா அருகே கம்போங் புக்கிட் பயோங்கில் புயலின் காரணமாகச் சென்று கொண்ருந்த காரின் மீது மரம் ஒன்று விழுந்தது. அவ்விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதியம் 3.20 மணியளவில் தனக்கு அழைப்பு வந்ததாகப் போகோக் சேனா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் மூத்த தீயணைப்பு அதிகாரி II ஷாஹ்ரின் மூசா தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மரம் ஹூண்டாய் ரக கார் மீது விழுந்ததைக் கண்டறிந்தனர். இதனால் ஓட்டுநர் ஓல் புக் காக் (74) அதில் சிக்கி மயக்கமடைந்தார்.
"தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்கள் மற்றும் புல்டோசரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை (ஓல்) காரிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது மற்றும் அவரது உடல் மேல் நடவடிக்கைக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மரத்தை வெட்டும் பணி சங்கிலி ரம்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டதாகவும், மாலை 5 மணி அளவில் மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிவடைந்த தாகவும் ஷாஹ்ரின் கூறினார்.
– பெர்னாமா








