அலோர்ஸ்டார், அக் 30 - நேற்று மாலை 3.30 மணியளவில் குபாங் பாசு மாவட்டத்தில் வீசிய பலத்தப் புயல் காரணமாக கம்போங் பிடா 3 மற்றும் பிடா 4 பாரு ஆகிய இடங்களில் பல வீடுகள் சேதமடைந்தததாகச் சிவில் தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) தெரிவித்துள்ளது.
இந்தப் பேரிடர் தொடர்பில் மாலை 3.45 மணிக்குத் தங்களுக்குப் புகார் கிடைத்ததாகக் குபாங் பாசு மாவட்ட ஏ.பி.எம். அதிகாரி கேப்டன் முகமது அடேனின் சுஹைமி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இங்குள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கனத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் உயிருடற்சேதம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சொத்துகளின் சேத மதிப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறிய அவர், குபாங் பாசு மாவட்டச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அப்பகுதியைக் கண்காணித்து, குப்பைகளைச் சுத்தம் செய்ய உதவி வருகிறது என்றார்.








