கோலாலம்பூர், அக் 26- மாநிலங்களில் அடிப்படை வசதி மற்றும்
மேம்பாட்டுத் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நில உரிமை
மாற்றம் தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதும் இதில்
அடங்கும் என்று அவர் சொன்னார்.
இது தவிர, கோரிடோர் எனப்படும் இடைவழி திட்டமிடல் மற்றும்
மேம்பாட்டில் அண்டை நாடுகளின் மேம்பாட்டு வாய்ப்புகள் கருத்தில்
கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
நேற்று இங்கு நடைபெற்ற வட கோரிடோர் அமலாக்கத் தரப்பு, இஸ்கந்தார்
வட்டார அமலாக்கத் தரப்பு மற்றும் கிழக்குக் கரை பொருளாதார வட்டார
மேம்பாட்டு மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள்,
கூட்டரசு மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மடாணி கோட்பாட்டிற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்கு
ஏதுவாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துறை சார்ந்த
மறுசீரமைப்புகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்று
நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
ஊக்குவிக்குப் நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டுச் சலுகை அனுமதி
தொடர்பான முடிவை மிடா எனப்படும் தொழிலியல் மேம்பாட்டு
வாரியத்தின் வாயிலாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல்
அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.








