கோலாலம்பூர், அக் 25 - அடுத்தாண்டி டீசல் விலை மறுசீரமைப்புச்
செய்யப்படவுள்ள நிலையில் நாட்டில் உணவு பாதுகாப்பு
நிலைத்தன்மையுடன் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று
பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.
உண்மையில் உதவித் தேவைப்படுவோருக்கு மட்டுமே மானிய உதவிகள்
சென்று சேர்வதை உறுதி செய்வதற்கு இலக்கிடப்பட்ட உதவித் தொகை
திட்டம் அவசியமாவதாகக் கூறிய அவர், இதன் மூலம் அரசாங்கத்தின் நிதி
நிலையையும் வலுப்படுத்த இயலும் என்றார்.
அடுத்தாண்டில் அமல்படுத்தப்படவுள்ள டீசல் விலை மறுசீரமைப்பு
காரணமாக பொருள்களின் விலை ஏற்றம் காண்பதற்கான சாத்தியம்
குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்தாண்டு பணவீக்கம் 2.1 முதல் 3.6 விழுக்காடு வரை இருக்கும் என
எதிர்பார்க்கப்படும் வேளையில் மக்களுக்கான உணவு விநியோகம் மற்றும்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்
தீவிரப்படுத்தும் என ரபிஸி சொன்னார்.
பத்து பகாட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான உறுப்பினர் ஓன் அபு பாக்கார்
எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்த பதிலை ஊராட்சி மேம்பாட்டுத் துணையமைச்சர் அக்மா
நசாருல்லா முகமது நாசீர் வாசித்தார்.








