அலோர் காஜா, அக் 25 - விரைவு பேருந்து ஒன்று லோரியின் பின்புறம்
மோதியதில் அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததோடு ஆறு
பயணிகளும் காயங்களுக்குள்ளாயினர். இச்சம்பவம் வடக்கு- தெற்கு
நெடுஞ்சாலையின் 220.7வது கிலோ மீட்டரில் இன்று விடியற்காலை
நிகழ்ந்தது.
விடியற்காலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஜைனுடின்
ஜைடுன் (வயது 49) என்ற அந்த பேருந்து ஓட்டுநர் உடலில் பலத்தக்
காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக அலோர்
காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அர்ஷாட் அபு
கூறினார்.
இந்த விபத்தில் மூன்று பயணிகளுக்கு காலில் காயம் ஏற்பட்ட
வேளையில் ஒருவருக்கு தலையில் காயமும் மேலும் இருவருக்கு
லேசான காயங்களும் ஏற்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்த போது ஏழு பயணிகளை ஏற்றியிருந்த அந்த பேருந்து
சிங்கப்பூரிலிருந்து சிரம்பான் பஸ் முனையம் நோக்கி வந்து கொண்டிருந்த
வேளையில் அந்த இரும்பு ஏற்றியிருந்த லோரி மலாக்காவிலிருந்து
ரவாங்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது என அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது 52 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற
லோரியின் பின்புறம் அந்த பஸ் மோதியது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்தது என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் லோரி ஓட்டுநர் காயமின்றித் தப்பியதாகக் கூறிய அவர்,
இவ்விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு அலோர் காஜா
மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அவர் பணிக்கப்பட்டுள்ளார்
என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்த சிங்கப்பூர் மற்றும் மியன்மார் நாட்டினர்
உள்ளிட்ட பயணிகள் ரெம்பாவ் மற்றும் சிரம்பான் மருத்துவமனைகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.








