ஈப்போ, அக் 25 - பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள
மூன்று துயர் துடைப்பு மையங்களில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர்
அடைக்கம் நாடியுள்ளனர்.
ஹிலிர் பேராக் மாவட்டத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 185 பேர் பாடாங்
தேம்பாக் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர்
மேலாண்மை செயல்குழு செயலகம் கூறியது.
அவர்கள் அனைவரும் லோரோங் கெடா, பத்து 9 சிம்பாங் தீகா, பத்து 9,
பத்து 10 மற்றும் லோரோங் சிடாம் ஓஸ்மான் கிராமங்களைச்
சேர்ந்தவர்களாவர் என்று அது குறிப்பிட்டது.
மேலும் கம்போங் கிளாங் கச்சாங் மற்றும் கம்போங் பத்து 9 சங்காட்
ஜோங் கிராமங்களில் உள்ள 15 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர்
லங்காப்பில் உள்ள தெலுக் இந்தான் நகராண்மைக் கழக மண்டபத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அது தெரிவித்தது.
கம்போங் மாத்தாங் தெங்காவிலுள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 19
பேர் கிரியான், சாங்காட் லோபோக் தேசியப் பள்ளியில் அடைக்கலம்
நாடியுள்ளனர்.
இதனிடையே, கிந்தா, கோல கங்சார், மூவாலிம், பாகான் டத்தோ, ஹிலிர்
பேராக், பேராக் தெங்கா ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை இடியுடன்
கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு காரணமாக குபு காஜா-ஈஜோக்-சும்பித்தான் சாலை அனைத்து
வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை கூறியது.








