கோலாலம்பூர், அக் 25 - பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின்
உறுதியான நிலைப்பாடு தொடர்பில் மேற்கத்திய நாடுகளிடமிருந்து தாம்
தொடர்ச்சியாக மிரட்டல்களைப் பெற்று வருவதை பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நேற்று அம்பலப்படுத்தினார்.
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தற்காப்பதில் மலேசியாவின்
உறுதியான நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக
அது முன்வைக்கும் விமர்சனங்கள் தொடர்பில் இந்த மிரட்டல்கள்
விடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
மக்கள் வழங்கிய அதிகாரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலும்
அரசாங்கத் தலைவர் என்ற முறையிலும் எந்தவொரு
அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களும் தாம் அடிபணியப் போவதில்லை
என்று அவர் உறுதிபடக் கூறினார்.
இறையாண்மைக் கொண்ட நாடு என்ற முறையில் மலேசியா தனது
சுதந்திரத்தை தொடர்ந்து தற்காக்கும் வேளையில் பாலஸ்தீன மக்களின்
சுதந்திரத்திற்காகவும் அது குரல் கொடுக்கும் என அவர் சொன்னார்.
நான் தொடர்ச்சியாக பல அச்சுறுத்தல்களை பெற்று வருகிறேன். நீங்கள்
தவறான நபரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று அவர்களிடம் நான்
கூறினேன். மக்களின் ஆதரவு இருக்கும்வரை நான இத்தகைய
அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.
நாம் தொடர்ந்து போராடுவோம் என்று புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா
அரோனா அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப்
பேரணியில் உரையாற்றும் போது அவர் முழங்கினார். இந்த பேரணியில்
சுமார் 16,000 பேர் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் இரட்டை வேடப் போக்கையும்
அன்வார் சாடினார். உக்ரேன் மீதான ரஷியாவின் படையெடுப்பை கண்டித்த அந்நாடு பாலஸ்தீனம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறது என்றார் அவர்.








