கோலாலம்பூர், அக் 25 – சட்டவிரோதப் பண மோசடி தொடர்பில் 2001ஆம் ஆண்டு பண மோசடி தடுப்பு, பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளின் வழி பொருளீட்டல் (அம்லா) சட்டத்தின் 4(1)(ஏ) பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அந்த சந்தேக நபர் 60 லட்சம் வெள்ளியை உட்படுத்திய பதினைந்துக்கும் மேற்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்.ஏ.சி.சி.) வட்டாரம் கூறியது.
வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக அந்நபர் நேற்று புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஒரு அரசியல் கட்சியின் தொகுதி துணைத் தலைவரும் அதே நீதிமன்றத்தில் 500,000 வெள்ளியை மோசடி செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளவுள்ளார்.
அதே நபர் மீது வியாழக்கிழமை (அக்டோபர் 26) ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 30 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான நிதி மோசடி சம்பந்தப்பட்ட பல குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படும். அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஒரே பிரிவின் கீழ் வரும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இதற்கிடையில், எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியைத் தொடர்பு கொண்டபோது, இந்த தகவலை உறுதிப்படுத்தினார். எனினும், மேல் விபரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.








