ஷா ஆலம், அக் 24- இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில்
பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில்
மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அதே சமயம், இஸ்ரேலுடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் மலேசியா
நிராகரிப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன்
இஸ்மாயில் கூறினார்.
இறையாண்மையைக் கொண்டிருந்த போதிலும் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு
அதன் 20 லட்சம் மக்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும்
பரிதாபத்திற்குரிய நாடு என்ற முறையில் பாலஸ்தீனம் மீது
ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுதான் நமது அடிப்படை நோக்கமாகும்
என்று அவர் சொன்னார்.
இஸ்ரேலியப் படைகள் எல்லையில் உள்ளன. காஸாவிலிருந்து மக்களை
வெளியேற்றுவதுதான் அடிப்படையான பிரச்சனையாக உள்ளது என்று
மக்களவையில் இன்று மாச்சாங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் வான் பைசால் வான் அகமது கமால் எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் ஆசியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்ற
முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எகிப்திய அதிபர்
அப்டில் பாத்தா எல்.சிசி, துருக்கி அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகன்
ஆகியோரைச் சந்தித்து மலேசியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்
என்றார் அவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற
பேரணியின் போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாவுவை
கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்துவதற்கு
விதிக்கப்பட்ட தடை ஏற்பாட்டாளர்களின் விவேகத்திற்குட்பட்ட முடிவே தவிர அரசாங்கத்தின் முடிவு கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.








