ஈப்போ, அக். 24 - ஆற்று நீர் பெருக்கெடுத்து தங்கள் வீடுகளில் புகுந்ததால் தெலுக் இந்தான், சங்காட் ஜோங்கில் உள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 50 பாடாங் தேம்பாக் சமூக மண்டபத்தில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடினர்.
கெடா லேன், கிளினிக் டேசா சாங்காட் ஜோங் பின்புறப் பாதை, பத்து 9, பத்து 10 மற்றும் சிம்பாங் தீகா ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக ஹிலிர் பேராக் பேரிடர் மேலாண்மை செயலகத்தின் பேச்சாளர் கூறினார்.
முஆலிமில் உள்ள பத்தாங் பாடாங்கில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி நள்ளிரவு வரை பெய்த கனமழையால் சுங்கை பீடோரில் நீர் கரைபுரண்டு சுங்கை பேராக் நோக்கி பாய்ந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நிவாரண மையம் நேற்று இரவு 7.00 மணிக்குத் திறக்கப்பட்டது என்றார் அவர்.
இன்று காலை 7.30 மணி நிலவரப்படி சுங்கை பீடோரில் நீர் மட்டம் 4.13 மீட்டர் அபாய மட்டத்தில் இருந்ததாகக் கூறிய அவர், அப்பகுதியில் மிதமான வானிலை நிலவுவதாகத் தெரிவித்தார்.








