புத்ராஜெயா, அக் 24: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 1972) இன் கீழ், குழந்தைகளுக்குப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் படுவது தெரிந்தாலும், அதை அதிகாரிகளிடம் தெரிவிக்காத நபர்களுக்கு RM5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
குற்றத்தை தடுக்கும் முயற்சியில், இதுபோன்ற சம்பவங்கள் அறிந்த ஆசிரியர்கள் அல்லது அண்டை வீட்டார்கள் போன்ற நெருங்கிய நபர்கள் மீது பிரிவு 19 மூலம் வழக்கு பதிவு செய்வது உட்பட கடுமையான அமலாக்கம் செயல்படுத்தப்படும் என பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸலினா ஓத்மான் கூறினார்.
"நான் அதை கடுமையான முறையில் செயல்படுத்த விரும்புகிறேன், ஏனென்றால் அக்கம்பக்கத்தினர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலையிட விரும்பவில்லை என்று நினைத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காப் புகாரளிக்க யாரும் இல்லை," என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இச்சட்டத்தின்படி, யாரேனும் ஒருவரின் தவறான நடத்தை அல்லது குற்றத்தை பற்றி தகவல் தெரிவிக்காதவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் குழந்தையாக இருந்தால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அதிகபட்சமாக RM5,000 அபராதம் விதிக்கப்படும்.
இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பாக அரச மலேசிய காவல்துறையின் பாலியல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வுப் பிரிவு (D11) மற்றும் நீதிமன்றத்தையும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிக்க குழந்தைகள் ஆணையரை சந்திப்பதாக அஸலினா கூறினார்.
இதுவரை, இந்தச் செயலுடன் தொடர்புடைய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
– பெர்னாமா








