கோலாலம்பூர், அக் 24 - புக்கிட் ஜாலில் , அஷியாத்தா அரேனா அரங்கில்
இன்றிரவு நடைபெறவிருக்கும் பாலஸ்தீனத்துடன் மலேசியா பேரணியில்
20,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹ்ரிப் தொழுகையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில் ஹாஜாட்
பிரார்த்தனையும் இடம் பெறும் என்று அபிம் எனப்படும் மலேசிய
இளைஞர் இயக்கத்தின் தலைவர் முகமது ஃபைசால் அப்துல் அஜிஸ்
கூறினார்.
பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை மையமாக கொண்டு அரசு சாரா
அமைப்புகளின் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் இந்த பேரணியில்
உரையாற்றுவர். இந்த நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாகப் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமின் உரை அமையும் என்பதில் சந்தேகமில்லை என்று
அவர் குறிப்பிட்டார்.
அபிம் மற்றும் ஜி.பி.எம். எனப்படும் மலேசிய உலக அமைதிக்கான
அமைப்பின் ஏற்பாட்டிலான இந்தப் பேரணி இரவு 7.30 மணி தொடங்கி
10.30 மணி வரை நடைபெறும். இது தவிர நாற்பதுக்கும் மேற்பட்ட அரசு
சாரா அமைப்புகளும் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளன என்று அவர்
சொன்னார்.
பாலஸ்தீனர்களைக் காப்பாற்றும் போராட்டம் தொடரும். அபிம்
இயக்கத்தை பொறுத்தவரை இந்த பேரணியோடு போராட்டம் நின்று
விடாது. பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக அது தொடர்ந்து குரல்
கொடுத்து வரும் என அவர் தெரிவித்தார்.
நமது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த பேரணிக்கு
நாம் ஏற்பாடு செய்துள்ளோம். பாலஸ்தீனத்தில் உண்மையில் என்ன
நடக்கிறது? அது குறித்து நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை
விளக்குவது இந்த பேரணியின் நோக்கமாகும் என்றார் அவர்.








