சிப்பாங், அக் 24 - ஓப் ஏஹ்சான் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு
தரப்பினரிடமிருந்து திரட்டப்பட்ட எழுபது லட்சம் வெள்ளி மதிப்புள்ள 50
டன் மனிதாபிமான உதவிப் பொருள்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள்
பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (சமய
விவகாரம்) டத்தோ டாக்டர் முகமது நாயிம் மொக்தார் கூறினார்.
எகிப்து நாட்டின் வாயிலாக அனுப்பப்படவுள்ள நிவாரணப் பொருள்களில்
மருந்துகள், குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும்
உணவுப் பொருள்களும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசக மன்றம் (மாப்பிம்),
குளோபல் பீஸ் மிஷன் (ஜி.பி.எம்.) எனும் உலக அமைதிக்கான அமைப்பு
உள்ளிட்டவை இந்த மனிதாபிமான உதவித் திட்டத்தை
ஒருங்கிணைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எகிப்தில் உள்ள ராஃபா எல்லை வழியாக இப்பொருள்களை
அனுப்புவதற்காக எகிப்து நாட்டின் அனுமதிக்காக தாங்கள் காத்திருப்பதாக
அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த உதவிப் பொருள்கள் ராஃபா எல்லையை அடைந்தவுடன்
பாலஸ்தீனத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிப் பொருள்கள்
முறையாகச் சென்று சேர்வதை அங்குள்ள அரசு சாரா அமைப்புகள் உறுதி
செய்யும் என்றார் அவர்.
இங்குள்ள மாப்பிம் கிடங்கில் உள்ள பாலஸ்தீன உதவிப் சேகரிப்பு
மையத்தை நேற்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார். இந்த வருகையின் போது பாலஸ்தீன மக்களுக்கு
மருந்துகள் வாங்குவதற்காகத் தாபோங் ஹாஜி வழங்கிய 100,000
வெள்ளிக்கான காசோலையையும் அவர் மாப்பிம் அமைப்பிடம்
ஒப்படைத்தார்.








