கோலாலம்பூர், அக் 24 - எதிர்கால உணவுப் பாதுகாப்பு நெருக்கடிகளைச் சமாளிக்க நாட்டின் வேளாண் உணவுத் துறையை மறுசீரமைப்பதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்துறை மிகவும் தளர்வான, போட்டித்தன்மைமிக்க மற்றும் நிலையானதாக இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் உருமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பெத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ராபு @ அமான் அனாக் பெக்ரி கூறினார்.
விவசாய நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்வது, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் மாற்ற முயற்சிகளுக்கு உதவும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
மக்களவையில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதே கருத்தைப் பிரதிபலித்த ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக், உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதில் அதிகம் சார்ந்திருக்கக் கூடாது என்றார்.
தற்போதைய உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு மலேசியா உணவு இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதே காரணம் எனக் கூறிய அவர், ஆண்டுக்கு 6,200 கோடி வெள்ளி வரை உணவு இறக்குமதிக்கு செலவிடப்படுகிறது என்றார்.
உணவு உற்பத்தி நாடுகள் நாணய நெருக்கடி, பருவநிலை மாற்றம், நோய்த் தொற்று அல்லது போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்களின் ஏற்றுமதி கொள்கைகளை மாற்றும்போது நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.








