கோலாலம்பூர், அக் 23- பள்ளிகளில் மாணவர் தலைவரை (சட்டாம்
பிள்ளை) தேர்ந்தெடுப்பதற்கு தேர்தலை நடத்தும் சாத்தியத்தை
கல்வியமைச்சு பரிசீலிக்கவுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான
அறிவை விருத்திப் பெறச் செய்யும் துணைக் கல்வியமைச்சர் லிம் ஹூய்
யிங் கூறினார்.
மக்களவையில் இன்று இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா முன்வைத்த பரிந்துரை தொடர்பில்
கருத்துரைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது ஒரு நல்ல பரிந்துரை. இது குறித்து நாங்கள் பரிசீலனைச் செய்வோம்.
இந்த பரிந்துரையை முன்வைத்ததற்கு நன்றி என்று அவர் மேலும்
சொன்னார்.
முன்னதாக அவையில் பேசிய சைபுடின், மாணவர்கள் மத்தியில் அரசியல்
அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாக உயர்கல்விக் கூடங்களில் நடத்தப்படும்
தேர்தல்களைப் போலவே பள்ளிகளிலும் நடைமுறை சார்ந்த அம்சங்கள்
முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்கள் தங்களுக்குள் தேர்தலை நடத்திக் கொள்ள வேண்டும் என
நான் பரிந்துரைக்கவில்லை. மாறாக, பள்ளி மாணவர் தலைவரைத் தேர்தல்
வழி தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியத்தை ஆராயலாம் என்றார் அவர்.
முன்பு, இடைநிலைப்பள்ளிகளில் மாணவர் தலைவர்கள் ஆசிரியர்களால்
தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, தேர்தல்கள் மூலம்தான் அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில கான்வெண்ட் பள்ளிகளில் இந்த நடைமுறை
அமலில் இருந்தது என அவர் தெரிவித்தார்.
கடந்த கால அனுபவங்களை நாம் ஆராயலாம். 18 வயதை அடையும்
போதுதான் மாணவர்கள் முதன் முறையாக வாக்குப் பெட்டியைப் பார்ப்பதை
இதன் மூலம் தவிர்க்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.








