கோலாலம்பூர், அக்14 - எதிர்பாராத விதமாக சேவை நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் வான் போக்குவரத்து துறைகளிடம் மைஏர்லைன் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
தங்கள் நிறுவனம் டிக்கெட் பணத்தைத் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்தி வருவதாகவும் அதுவரை பயணிகள் அனைவரும் பொறுமையாக இருக்குமாறும் அதன் இடைக்கால பொறுப்பதிகாரி டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட எங்கள் பயணிகளுக்கு சிறந்த முறையில் உதவுவதற்கும் பணத்தைத் திரும்பத் தருவதற்கும் நாங்கள் ஹாட்லைன் தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் (பயணிகள்) தங்கள் முன்பதிவு எண்ணை (பிஎன்ஆர்) வழங்கவும் customercare@myairline.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மைஏர்லைன் பணியாளர்கள் அனைவரும் இன்னும் பணியில் உள்ளனர். நிறுவனம் யாரையும் ஊதியமில்லாத விடுப்பில் வைக்கவில்லை எனவும் அவர் விளக்கினார்.
விவேக பங்காளித்துவம் குறித்து கருத்துரைத்த அசாருதீன், அத்தகைய பங்காளித்துவம் தொடர்பில் பல தரப்பினர் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவற்றைத் தாங்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை எங்கள் மதிப்புமிக்க பயணிகள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழங்கி வருவோம் என்று அவர் கூறினார்








