கோலாலம்பூர், அக் 13- மைஏர்லைன் சென். பெரஹாட் விமான நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது தொடர்பானத் தகவலை போக்குவரத்து அமைச்சும் மலேசிய வான் போக்குவரத்து ஆணையமும் (மாவ்கோம்) நேற்று முன்தினம் இரவுதான் அறிந்தன.
இந்த விஷயம் குறித்து தாம் மிகுந்த ஆச்சரியமடைந்ததாகக் கூறிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், அந்த விமான நிறுவனத்தின் இப்பொறுப்பற்ற செயல் தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகச் சொன்னார்.
அந்த விமான நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் அனைத்துலகப் பயணிகளும் பாதிக்கப்பட்டதால் நாட்டின் நற்பெயருக்கும் இதனால் களங்கம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மாவ்காம் முற்றிலும் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. சேவை நிறுத்தம் குறித்து அவர்கள் மாவ்கோமிற்கு கூட அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
நான் டத்தோஸ்ரீ ஷரிபுடின் காசிமிடம் விசாரித்தேன். மாவ்கோமின் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் மைஏர்லைன் நிறுவனம் அவரிடம் கூட தெரிவிக்கவில்லை. அவர்கள் தொடர்பு கொண்டபோதுதான் நேற்று காலை 6.00 மணிக்கு சேவை நிறுத்தம் அமலுக்கு வருவதை அவர்கள் உறுதிப்படுத்தினர் என்று லோக் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடுமையான நிதி நெருக்கடி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பயணச் சேவைகளை நிறுத்தி வைப்பதாக மை ஏர்லைன் நிறுவனம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
நாட்டின் முதல் சம்பவம் இதுவென வர்ணித்த அவர், அடுத்தாண்டு மார்ச் வரையிலான விமான முன்பதிவுகளுக்கு 2 கோடி வெள்ளிக்கும் அதிகமான டிக்கெட் விற்பனையை அந்நிறுவனம் 125,000 பயணிகளிடம் மேற்கொண்டுள்ளதாகச் சொன்னார்.








