கோலாலம்பூர், அக் 13- தேசிய நீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) நிர்வாகத்தை சீரமைக்கும் மற்றும் அதன் உயர்நெறியை வலுப்படுத்தும் முயற்சியாக 2006ஆம் ஆண்டு தேசிய நீர் சேவை ஆணையச் சட்டத்தை (சட்டம் 654) திருத்துவதற்கான மசோதாவை மக்களவை நேற்று நிறைவேற்றியது.
இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் நீர் வளம் தொடர்பான தற்போதைய வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு எப்போதும் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்ய அச்சட்டத்தில் மேம்படுத்தக்கூடிய பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சி கூறினார்.
ஸ்பான் நிர்வாகத்தை மேலும் திறமையானதாக வலுப்படுத்துவது மற்றும் ஒழுங்குமுறை ஆற்றலை அதிகரிப்பது ஆகியவையும் இதில் அடங்கும். இதன் மூலம் மிகவும் ஆக்ககரமான முறையில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
நிலையான வளர்ச்சியை அடைவதற்கான உலகளாவிய மற்றும் தேசிய முன்னெடுப்புகளுக்கு ஏற்ப, வட்டார பொருளாதாரம், பயனீட்டுத் திறன், பயனீட்டாளர் பாதுகாப்பு மற்றும் பொது மற்றும் தனியார் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையிலான புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று மசோதாவை இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்யும் போது கூறினார்.
ஆணைய உறுப்பினரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக குறைக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.








