கோலாலம்பூர் செப் 10- நாட்டிலுள்ள 30 தமிழ் பள்ளிகளின் நூல் நிலையங்களுக்கு 20,000 வெள்ளி மதிப்புள்ள புத்தகங்களை மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அன்பளிப்பு செய்தார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேலோங்க செய்யும் வகையில் இந்த புத்தகங்கள் அன்பளிப்பு செய்வதாகப் பலத்த கரவொலிக்கிடையே அவர் இதனை அறிவித்தார்.
நாடறிந்த குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற விழாவில் 30 தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களிடம் இந்த புத்தகங்களை அமைச்சர் சிவகுமார் நேரடியாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் தேவைப்படும் தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுபோன்ற புத்தகங்கள் தொடர்ந்து அன்பளிப்பு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சங்காட், மெங்கெலும்பு மற்றும் ஜெலாப்பாங் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டது.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் இந்த புத்தகங்கள் மிகவும் தரமானது மற்றும் மாணவர்களின் அறிவு திறனையும் வளர்க்கும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார். குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் அளப்பரிய தமிழ் சேவையைப் பெரிதும் பாராட்டுவதாக அவர் சொன்னார் .
இன்று நடைபெற்ற விழாவில் மலேசிய இந்தியர் சமூக வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன், மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகை கடை சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுதந்திரம், மலேசிய இந்தியர் ஜவுளி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி, கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை உட்பட தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








