கோலாலம்பூர் செப் 4- இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
14 ஆண்டுகால போராட்டத்திற்கு மடாணி அரசாங்கத்தின் வழி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தீர்வு கண்டார். உடனடி தீர்வு கண்ட பிரதமருக்கு இந்த வேளையில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு சிறப்பு வருகை புரிந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விஸ்மா துன் சம்பந்தனில் அங்காடி வியாபாரிகளுக்கான வியாபார உருமாற்றம் எனப்படும் ஸெஸ்தாரி நியாகா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
முடிதிருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் ஜவுளி ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் 2009 ஆம் ஆண்டு முதல் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனையை எதிர் நோக்கி வருகிறது.
நீண்ட காலமாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று மீண்டும் நேரடியாக பிரதமரிடம் கோரிக்கையை முன் வைத்தார்.
நீண்ட காலமாக என்னிடம் முன் வைக்கப்படும் இந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக பாதி அளவில் இந்த மூன்று துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்குவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு செய்தது மிகவும் பாராட்டுக்குரியது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.








