ECONOMY

ஒற்றுமையை வலுப் படுத்தும் திட்டங்களுக்கு 2024 பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை- அமைச்சு கோரிக்கை

1 செப்டெம்பர் 2023, 3:02 AM
ஒற்றுமையை வலுப் படுத்தும் திட்டங்களுக்கு 2024 பட்ஜெட்டில் கூடுதல் நிதி தேவை- அமைச்சு கோரிக்கை

கோலாலம்பூர், செப் 1 -வரும்  அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் ஒதுக்கீட்டை தாங்கள் கோரியுள்ளதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல்லின சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டிற்கு  திட்டமிடப்பட்டுள்ள பல  திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒதுக்கீடு தேவைப்படுகிறது  என்று அவர் சொன்னார்.

கூடுதல் ஒதுக்கீட்டுக்கு  நாங்கள் விண்ணப்பித்துள்ளோம். ஆனால் அது குறித்த கூடுதல் விவரங்களை என்னால் தற்போதைக்கு  தர இயலாது என்று அவர் தெரிவித்தார்.

துன் ஹுசைன் ஓன் பிரதான நினைவு மண்டபத்தில் நேற்று  நடைபெற்ற அனாக் மெர்டேகா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய மாதம் மற்றும் தேசிய தினத்தின் போது மட்டும் அல்லாமல், ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது உறுதி செய்வதை தமது அமைச்சு தலையாயக் கடப்பா டாக்  கொண்டுள்ளதாக ஆரோன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளின் தொடக்கத்தில் ருக்குன் நெகாரா கோட்பாட்டை  வாசிப்பது மற்றும் ஒற்றுமை வாரத்தை கொண்டாடுவது ஆகியவை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.

இனங்களுக்கிடையில் உள்ள இடைவெளியை அகற்றுவதற்கு ஏதுவாக தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது பரிந்துரை  குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,  இதுபோன்ற பள்ளிகள் உண்மையில் மக்களிடையே  ஒற்றுமையை வளர்க்கிறது என்றார்.

எங்கள் கலந்தாய்வுகள்  மற்றும்  ஆய்வரங்குகள் மூலம் தாய்மொழிப் பள்ளிகள் உண்மையில் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

சபா மற்றும் சரவாக்கில் பூமிபுத்ரா மாணவர்களில் 60 சதவீதம் பேர் தாய்மொழிப்  பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்கள் மாண்டரின் மொழியில் சரளமாக பேசுகிறார்கள். எனவே, இது மகாதீரின் குற்றச்சாட்டுக்கு நேர்மாறானது என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.