கோலாலம்பூர், ஆக 27- ஒற்றுமை அரசாங்கம் 54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
கடந்த 2017 முதல் 2022 வரை குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை அதுவாகும் என்று தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்ட காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 47 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
1964ஆம் ஆண்டு குடியுரிமை விதிகள் தொடர்பான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 111இன் நிபந்தனைகளுக்கு இணங்கியே அந்த விண்ணப்பங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்டன என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உண்மையானவையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதோடு அவதூறான தகவல்களைப் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பெரும் எண்ணிக்கையிலான அந்நிய நாட்டினருக்கு குறிப்பாக சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் சைபுடின் முன்னதாக மறுத்திருந்தார்.
பொறுப்பற்றத் தரப்பினரால் பரப்பப்படும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டு இது எனக் கூறிய அவர், குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.








