பெக்கான், ஆக 27 - பி2 பிரிவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் லைசென்ஸ்களை இயல்பாகவே பி பிரிவுக்கு தரம் உயர்த்தும் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
பி 2 உரிமம் பெற்றவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டிய அனுபவம் இருப்பதால் இந்த திட்டத்தில் எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பு இல்லை என்று தாம் கருதுவதாக அவர் சொன்னார்.
அவர்கள் அனுபவம் வாய்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் என்பதால் அவர்களுக்கு ஓட்டுநர் சோதனை தேவை என்று நான் நினைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளும் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை நான் முதலில் போக்குவரத்து அமைச்சரிடம் (அந்தோனி லோக் சியூ ஃபூக்) முன்வைப்பேன். இது நிர்வாக விவகாரம் என்பதால் இதனை ஒரு பிரச்சனையாக நான் கருதவில்லை என்றார் அவர்.
இன்று இங்கு கெம்பாரா மெர்டேக்கா 66 மோட்டார் சைக்கிள் அணியை வழியனுப்பி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மலேசியாவின் சூப்பர் பைக்கர்ஸ் சங்கத்தின் 238க்கும் மேற்பட்ட உயர்-சக்தி கொண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் மற்றும் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹலிம் சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தற்போது பி2 பிரிவு லைசென்ஸ் உள்ள மோட்டார் சைக்கிளோட்டிகள் 250 சி.சி.க்கு மிகாத மோட்டார் சைக்கிள்கள்களையும் பி பிரிவு லைசென்ஸ் வைத்திருப்போர் 500 சி.சி. வரையிலான மோட்டார் சைக்கிள்களையும் ஓட்டுவதற்கு சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) அனுமதிக்கிறது.
முன்னதாக, மோட்டார் சைக்கிள் உரிமம் பெற்ற மூன்று ஆண்டுகளுக்குள் கடுமையான போக்குவரத்து குற்றங்களை புரியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பி2 பிரிவு ஓட்டுநர் உரிமத்தை இயல்பாகவே பி பிரிவுக்கு மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரை அறிக்கையை அப்துல் ஹலீம் ஜாஹிட்டிடம் சமர்ப்பித்தார்.








