ஷா ஆலம், ஆக 5- வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழுமையான ஆதரவைத் வழங்க மஇகா எடுத்துள்ள முடிவை செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்.
இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சியான மஇகாவின் இந்த முடிவு இந்திய சமூகத்தில் ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளதோடு நாட்டின் அரசியலிலும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குணராஜ் கூறினார்.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்ற மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் முடிவு பாரட்டப்பட வேண்டிய ஒன்று. இதர விவகாரங்களைக் காட்டிலும் சமூகத்தின் நலனுக்கு அக்கட்சி முக்கியத்துவம் தருவதை அக்கட்சியின் இந்த நிலைப்பாடு புலப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வரும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரிக்கும்படி கட்சியினருக்கு மஇகா தேசியத் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை கருத்து வேறுபாடுகளை மறந்து சமூகத்தின் மேம்பாட்டிற்கான ஒன்றிணைந்து பாடுபடும் உயரிய நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்றார் அவர்.
இந்த ஒற்றுமையின் வழி அரசாங்கத்தில் இந்திய சமூகத்தின் ஒரு ஓங்கி ஒலிக்கவும் அனைத்து நிலைகளிலும் இந்திய சமூகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் பெரிதும் துணை பரியும் என அவர் சொன்னார்.
செந்தோசா தொகுதியிலும் மஇகா கோத்தா ராஜா தொகுதி தலைவருடன் தாம் சந்திப்பு நடத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்கத்தான் ஹராப்பான் வெற்றிக்காக பிரசாரம் செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.








