சிப்பாங், ஆக 2- மக்களின் உரிமைகளை பறிக்கும் மற்றும் ஊழலில் திளைக்கும் தலைவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்துவதையும் எதிர்க்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நேர்மையாக உழைக்கும் மற்றும் எந்தத் தவறுகளில் ஈடுபடாத தலைவர்களை மதிப்பிட்டு மக்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
எட்டு மாத (ஒற்றுமை அரசு) ஆட்சியில் பணம், நிலம் அல்லது வெட்டுமரத் திருட்டு தொடர்பான புகார்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியை கவனித்தால் ஜானா விபாவா திட்டத்தில் ஊழல், வெள்ள நிவாரண பணம் குறித்து வாய் திறப்பதில்லை. ஏழைகளுக்கான சமையல் எண்ணையும் திருடப்படுகிறது. என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார்.
அதனால்தான் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுகிறேன். வெளிப்படையாகச் சொன்னால், நான் பிரதமராக வருவதற்கு நீண்ட காலமாக காத்திருந்தேன் என்பது உண்மைதான். எதற்காக? மக்களுக்கு உதவுவதற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக என்று நேற்று இரவு இங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறினார்.
ஊழலில் ஈடுபடும் மக்களின் பணத்தை திருடும் எந்த தலைவருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் உறுதிபடக் கூறினார்.
நான் பிரதமராக இருக்கும் போது ஒரு அமைச்சரோ, மந்திரி புசாரோ அல்லது முதலமைச்சரோ மக்களின் சொத்தை திருடினால் என்ன செய்வது? நான் அவர்களை வெளியேற்றுவேன். கைது செய்து சிறையில் அடைப்பேன் என்று அவர் சொன்னார்.
இதற்கிடையில், அரசியல் கட்சிகளுடன் ஆட்சியாளர்களை தொடர்புபடுத்தும் சில எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளையும் அன்வார் கண்டித்தார்.








