கோல லங்காட், ஜூலை 2- கோல லங்காட் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகத்தின் வாயிலாக நிதியுதவி வழங்கப்பட்டது.
நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பாதிக்கப்பட்ட 152 குடும்பத்தினரிடம் உதவித் தொகையை வழங்கினார்.
மாநில அரசின் இந்த 500 வெள்ளி உதவித் தொகை அன்றாடத் தேவைக்கான பொருள்கள் வாங்குவதற்கு பேருதவியாக இருக்கும் என்று முகமது ஜைனி டாஷி (வயது 65) கூறினார்.
இப்புயலில் கம்போங் தாலி ஆயரில் உள்ள தனது வீட்டின் கூரை காற்றில் பறந்து விட்டதாக கூறிய அவர், பல்வேறு தரப்பினரின் உதவியுடன் வீடு சீரமைக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்.
அந்த கோரப் புயலின் தாண்டவம் இன்னும் நெஞ்சில் நிழலாடுவதாகக் கூறிய டி சத்தியா தேவி (வயது 40), இந்த பேரிடரில் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னார்.
அதிகாலை 4.00 மணியளவில் எங்கள் குடியிருப்பு பகுதியைப் புயல் தாக்கியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நாங்கள் என்ன நேர்ந்தது என சுதாரிப்பதற்குள் சமையலறையின் கூரை முழுமையாகப் பெயர்ந்து காற்றில் பறந்து விட்டது என்றார் அவர்.
கையில் இருந்த சேமிப்பைப் பயன்படுத்தி சுமார் 5,000 வெள்ளி செலவில் வீட்டை சீரமைத்த தாக அவர் மேலும் தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கிய எம்.பி.ஐ. பொறுப்பாளர்களுக்கும் மாநில அரசுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் மோரிப், கம்போங் கிளானாங் மீன்பிடி படகுத் துறையை சீரமைப்பதற்கு 48,700 வெள்ளி எம்.பி.ஐ. வழங்கியது.








