புத்ராஜெயா, மார்ச் 3- வெள்ளத்தில் சிக்கிய காரணத்தால் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை எழுத முடியாமல் போன 431 மாணவர்கள் மறுபடியும் தேர்வை எழுதுவதற்கான இடம் மற்றும் நாள் மறுஅட்டவணையிடப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் முழுமையான தகவல்களைத் திரட்டும் பணியில் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருவதாகக் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
மாநில கல்வி இயக்குநரிடமிருந்து உறுதிச் சான்று கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மறு தேர்வு எழுதுவதற்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அது தெரிவித்தது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக ஜொகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள 17 தேர்வு மையங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளம் காரணமாகச் சாலைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்ட காரணத்தால் அவற்றில் ஏழு மையங்களுக்குச் செல்ல முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜொகூர் மற்றும் பகாங்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 195 மாணவர்கள் அரசாங்கத் துறைகளின் ஒத்துழைப்புடன் தேர்வு மையங்களுக்கு வெற்றிகரமாகக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்றும் அது கூறியது.








