ஷா ஆலம், மார்ச் 2- சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் அடுத்த 12 மணி நேரத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக வடிகால் நீர்பாசனத் துறையின் தேசிய வெள்ள கணிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மலாக்கா, நெகிரி செம்பிலான், திரங்கானு, பகாங் மற்றும் சரவா ஆகியவை இப்பாதிப்பு அபாயம் உள்ள இதர மாநிலங்களாகும் என்று அம்மையம் இன்று காலை 11.15 மணிக்கு வெளியிட்ட அறிக்கை கூறியது.
சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட், கிள்ளான், கோல லங்காட், கோல சிலாங்கூர், சிப்பாங், பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநிலத்திலுள்ள நகரங்களைப் பொறுத்தவரை கிள்ளான் நகர், பெக்கான் காப்பார், பெக்கான் சோடோல், பெக்கான் ஜென்ஜாரோம், கோல லங்காட், கோல சிலாங்கூர், சிப்பாங், பெஸ்தாரி ஜெயா, செர்டாங், பத்து தீகா மற்றும் ஷா ஆலம் ஆகியவை இந்த பாதிப்பை எதிர்நோக்கும் என அஞ்சப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இக்காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய திடீர் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதிகாரிகள் மற்றும் வெள்ள மேலாண்மை நிறுவனத் தரப்பினர் வெளியிடும் முன்னெச்சரிக்கையை பின்பற்றி நடக்கும்படியும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.







