ஜொகூர் பாரு, மார்ச் 1- கோத்தா திங்கி பெங்கேராங்கிலிருந்து இங்குள்ள பெங்காலான் தம்போய் நோக்கி நான்கு பேருடன் நேற்று பிற்பகல் புறப்பட்ட ஜொகூர் மீன்வளத் துறையின் படகு ஒன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படகு காணாமல் போனத் தகவல் நேற்றிரவு 7.51 மணிக்குத் தங்களுக்குக் கிடைத்ததாக ஜொகூர் கடல்சார் அமலாக்கத் துறையின் இயக்குநர் முதலாம் அட்மிரல் நுருள் ஹிஸாம் ஜக்காரியா கூறினார்.
நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் பெங்கேராங், தஞ்சோங் பெங்கேலியிலிருந்து புறப்பட்ட அந்த படகு மாலை 6.30 மணியளவில் பெங்காலான் தம்போய் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
அந்த படகைக் கண்டறிய முடியாததைத் தொடர்ந்து நேற்றிரிவு 8.00 மணியளவில் தேடி மீட்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த படகை நேற்று மாலை 3.00 மணியளவில் துவாஸ் கடல்பகுதியில் ஆகக் கடைசியாகத் தாங்கள் கண்டதாகச் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையில் துவாஸ் மற்றும் தஞ்சோங் பியாய் வரையிலாக பகுதியை இலக்காக கொண்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
அந்த படகை கண்டுபிடிப்பதற்கும் அது தொடர்பான மேல் விபரங்களை அறிந்து கொள்வதற்கும் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் புத்ரா ஜெயாவிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.








