புத்ராஜெயா, பிப் 28- பூச்சோங் தொழில்பேட்டைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் போலி மலேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த 29 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவின் சுலாவேசி, மேடான், ஆச்சே, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 முதல் 70 வயது வரையிலான அந்த 29 பேரும் இந்நாட்டில் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது என்று தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
அந்த அந்நிய நாட்டினர் பயன்படுத்திய அடையாள அட்டைகள் அனைத்தும் சபா மாநிலத்தில் இல்லாத இடத்தின் முகவரியைக் கொண்டிருந்ததோடு அதன் தரம் மோசமானதாகவும் காணப்பட்டது என அவர் சொன்னார்.
இது தவிர, அந்த அடையாள அட்டைகள் எந்த பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிராததோடு இதிலுள்ள விபரங்கள் தேசியப் பதிவுத் துறையின் தரவுகளிலும் காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த அடையாள அட்டைகள் அனைத்தும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஏஜெண்ட் ஒருவரிடமிருந்து 300 வெள்ளிக்குப் பெறப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
அந்நிய நாட்டினர் கைது மற்றும் அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டது தொடர்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
அந்த தொழில் பேட்டைப் பகுதியில் வேலை செய்யும் அதிகமான அந்நிய நாட்டினர் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.








