கோலாலம்பூர், பிப் 24 - தேசிய உயர்கல்விக் கடனுதவிக் கழகத்தின் (பி.டி.பி.டி.என்.) கடன் உதவி பெற்றவர்களுக்குக் கடனைத் திரும்பச் செலுத்தும் தொகையில் 20 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் மார்ச் ஒன்றாம் தேதி அமலுக்கு வருகிறது.
இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடன் பெற்ற மாணவர்களின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு மாதம் 1,800 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுவோர் ஆறு மாதக் காலத்திற்குக் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கு வரும் மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கி விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.








