ஷா ஆலம், பிப் 23- ஐம்பத்தைந்துக்கும் குறைவான வயதுடைய ஊழியர் சேமநிதி வாரிய (இ.பி.எப்.) உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது 71 விழுக்காட்டினர் ஓய்வு பெறும் போது போதுமான அளவு பணம் இல்லாதவர்களாக அல்லது வறுமைக் கோட்டில் வசிப்பவர்களாக உள்ளனர்.
ஐம்பத்தைந்து வயதில் ஓய்வு பெறும் போது சேமிப்பில் இருப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான 240,000 வெள்ளியை வைத்திருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2020இல் 36 விழுக்காடாக இருந்த வேளையில் கடந்தாண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 29 விழுக்காடாகக் குறைந்துள்ளது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பெருந்தொற்று காலத்தில் மீட்டப் பணத்தை ஈடுசெய்வதற்காக இ.பி.எப். உறுப்பினர்கள் மேலும் நான்கு முதல் ஆறாண்டுகள் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று கோம்பாக் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இ.பி.எப். தொகையை மீட்பது மீது அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் அவர்கள் தங்களின் சேமிப்பின் அளவை மீண்டும் உயர்த்துவதற்கான உதவித் திட்டம் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இ.பி.எப். மொத்த உறுப்பினர்களில் 51 விழுக்காட்டினர் அல்லது இன்னும் சந்தா செலுத்தி வரும் உறுப்பினர்களில் 6.7 விழுக்காட்டினர் கடந்தாண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 10,000 வெள்ளிக்கும் குறைவான தொகையை மட்டுமே சேமிப்பில் வைத்திருந்ததாக அவர் சொன்னார்.








