கோலாலம்பூர், பிப் 22- மலேசியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் இயக்கவாதியான எஸ். முகேஷ் (வயது 25) 2023ஆம் ஆண்டிற்கான உயரிய ஆசியான்-இந்திய இளைஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
இம்மாதம் 12 முதல் 16 வரை இந்தியாவின் தெலுங்கானா மாநில ஹைதரபாத் நகரில் நடைபெற்ற நான்காவது ஆசியான்-இந்தியா இளைஞர் மாநாட்டில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு வருகை புரிந்த தெலுங்கானா மாநிலக் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய வெளியுறவு அமைச்சரும் கல்வியமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரிடமிருந்து அந்த விருதைத் தாம் பெற்றதாக முகேஷ் அறிக்கை ஒன்றில் கூறினார்.
சமூகத்திற்கு வழங்கிய சேவைகள், இந்த மாநாட்டின் போது ஆற்றிய பணிகள், தலைமைத்துவ பங்களிப்பு மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபு பொறியியல் தத்துவத் துறை முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இரண்டாம் ஆண்டு மாணவரான முகேஷ், இளைஞர் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்பு மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காகக் கடந்த 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் டயானா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவர் 2021ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் இளைஞர் விருக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வான முதல் மலேசியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








