புத்ராஜெயா, பிப் 21- அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என செய்தி வெளியிட்ட உள்நாட்டு ஊடகமான ஓஸம் டிவிக்கு எதிராகத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
லைசென்ஸ் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியதற்காக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 206 வது பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுவதாக எம்.சி.எம்.சி. அறிக்கை ஒன்றில் கூறியது.
அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பரிசீலிக்கப்படுவதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாகப் புகார் பெற்றதைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி நிறுவன பொறுப்பாளர்களுக்கும் எம்.சி.எம்.சி. அதிகாரிகளுக்கும் இடையே நேற்று சந்திப்பு நடைபெற்றதாக அது தெரிவித்தது.
இதன் தொடர்பான விசாரணை முற்றுப்பெற்ற உடன் மேல் நடவடிக்கைக்காக அந்த விசாரணை அறிக்கை துணை பப்ளிக் புரோசிகியூட்டரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் சட்டப்பிரிவு 242 இன் படி ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் அல்லது ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற செய்தியை வெளியிட்டது தொடர்பில் ஓஸம் டிவி பொறுப்பாளர்களுடன் எம்.சி.எம்.சி சந்திப்பு நடத்தும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹாமி ஃபாட்சில் அண்மையில் கூறியிருந்தார்.
அந்த செய்தி ஒளிபரப்பான விவகாரத்தில் ஆறு விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.








